இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 02, 2010

தனக்கு வந்தால்தான் அந்த இன்பவலியை உணரமுடியுமோ?

வேலூர் : பெண் போலீசை மணந்து கொண்ட ராணுவ வீரர், அவருக்கு தெரியாமல் மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்ற போது, முதல் மனைவி தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். ராணுவ வீரர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர், டில்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மாங்காட் டைச் சேர்ந்த சத்யா (26) என்பவருக்கும், திருமணம் செய்ய கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மூன்று லட்சம் ரூபாய் வரதட்சணையாக கோபால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இவர்கள் திருமணம், திருவலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடக்க இருந்தது. திருமணத்துக்கு இரு வீட்டார் சார்பில், நூற்றுக்கணக்கான உறவினர்கள் வந்திருந்தனர். சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் செந்தில்குமாரி (34) என்பவர், "எனக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. தற்போது என்னை விட்டு, விட்டு வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதால், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சிப்காட் மகளிர் போலீசாரிடம் நேற்று காலை 8 மணிக்கும், திருவலம் போலீசாரிடம் காலை 9 மணிக்கும் புகார் செய்தார். செந்தில்குமாரி கொடுத்த புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். தானும் ஒரு போலீஸ் தான் என்று கூறியதையும் ஏற்கவில்லை. அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரி, திருமணத்தை தடுக்க நேரடியாக களம் இறங்கினார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். திருமண மண்டபத்தின் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கினர். செந்தில்குமாரி தர்ணா செய்யும் விவரம் அறிந்த கோபாலகிருஷ்ணன் மணமேடையில் இருந்து அவசர, அவசரமாக சத்யாவுக்கு தாலி கட்ட முயன்றார். செந்தில்குமாரி தர்ணா செய்தது குறித்து தகவல் அறிந்த மணப்பெண் சத்யா, மேடையை விட்டு இறங்கி வந்து விசாரித்த போது, கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்ட விவரம் தெரிந்தது. ஆத்திரமடைந்த சத்யா மண மேடையை விட்டு வெளியேறினார். சத்யாவின் உறவினர்கள், பெற்றோர் தாங்கள் கொடுத்த சீர் வரிசைப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு பெண் வீட்டாரும், அவர்களது உறவினர்களுடன் வெளியேறினர். இதனால் திருமணம் நின்றது. இந்த நேரத்தில் கோபாலகிருஷ்ணன் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கி விட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார், தர்ணா செய்த செந்தில்குமாரியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். தன் தங்கைக்கு திருமணம் நின்று போன வருத்தத்தில் சத்யாவின் அண்ணன் ராமமூர்த்தி (45) அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது, அவர்களது உறவினர்கள் காப்பாற்றினர்.

இது குறித்து பெண் காவலர் செந்தில்குமாரி கூறியது
: பெண் போலீசான என்னைப் பார்த்து பயப்படாமல் காதலிப்பதாக சொன்ன கோபால கிருஷ்ணன் தைரியத்தை பார்த்து, 2007 முதல் அவரை காதலித்தேன். அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்தேன். கடந்த ஜூன் 20ம் தேதி திருப்பதியில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வரதட்சணையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்னிடம் வாங்கிக் கொண்டார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் கிடைத்ததும் சிப்காட், திருவலம் போலீசில் புகார் கொடுத்த போது, போலீசான நான் கொடுத்த புகாரையே வாங்க மறுத்து விட்டனர். எனக்கே இந்த கதி என்றால், பொது மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கோபால கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

தாய் மாமன் மணந்தார்:
சத்யாவின் திருமணம் நின்று போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாமன் முருகேசன், சத்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து சத்யாவுக்கும் முருகேசனுக்கும் ஆற்காட்டில் திருமணம் நடந்தது.

===================

காதலித்தார் என்று சொல்கிறார். ஆனால் காதல் திருமணத்தில் வரதட்சணை கொடுத்தேன் என்கிறார். பெண் போலிஸாக இருந்துகொண்டு 1.5 லட்சம் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்ததாகக் கொஞ்சமும் கூசாமல் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தூக்கியெறிந்து சட்டத்திற்கு புறம்பாக நடந்ததை “கூலாக” செய்தித்தாளுக்கு பேட்டியளித்திருக்கிறார். போலிஸே சட்டத்தை மீறி வரதட்சணைக் கொடுத்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு போலிஸ் சட்டத்தை மதிக்காதபோது மற்றொரு போலிஸ் இவர் புகார் கொடுக்கும்போது எப்படி சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கே (SP) மாதச் சம்பளம்
Rs.18,670-6500. ஆனால் இங்கு செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள வரதட்சணை 1.5 லட்சம்!!!

Designation Pay scale (Rs.)

01 Superintendent of Police 18,670-6500
02 Addl. Supdt. of Police 10,000-325-15,200
03 Dy. Supdt. of Police 8,000-275-13,500
04 Inspector of Police 6,500-200-11,100
05 Sub-Inspector of Police 5,300-150-8,300
06 Head Constable 4,000-100-6000
07 Grade I Police Constable 3,200-85-4900
08 Grade II P.C. 3050-75-3950-80-4,590


மகளிர் காவல்நிலையங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவிப் பெண்களும், ஆண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அப்பாவிகளை தரக்குறைவாக நடத்தி பொய் வழக்குகள் பதிவுசெய்து அநாகரிகமாக நடத்தும்போது அந்த அப்பாவிகளுக்கு ஏற்படுவது என்ன இன்பவேதனையா? எந்த ஒரு வரதட்சணை வழக்கும் முறையாக விசாரணை செய்யப்படுவதில்லை. புகார் பொய் என்று தெரிந்தாலும் புகாரில் இருப்பதை அப்படியே “வாந்தியெடுத்து” குற்றப்பத்திரிக்கையாக நீதிமன்றங்களுக்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிக்கும்போது அந்த அப்பாவிகள் என்ன இன்பத்தில் மூழ்கித் திளைக்கிறார்களா?

மகளிர் காவல் நிலையங்கள் பல அப்பாவிகளின் வாழ்வை சிதைக்கும் கூடாரங்கள். பொய் வரதட்சணை வழக்குகளின் களஞ்சியம். தனக்கு என்று வரும்போதுதான் அந்த வேதனை புரியும். சட்டங்கள் செய்யாததை அப்பாவிகளின் சாபம் தப்பாமல் செய்யும்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.