இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, May 02, 2014

மதுரை பகுதியில் நடக்கும் ஒப்பந்த “லிவிங் டூ கெதர்” லைஃப் ஸ்டைல்!

மேலைநாடுகளில் அனைவரும் ஆடையில்லாமல் திரிவார்கள்,  யாரும் யாருடனும் வாழலாம். எந்தவித கட்டுப்பாடு, கலாச்சாரம் எதுவும் இல்லை என்றெல்லா நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.   ஆனால் அவையெல்லாம் இந்தியாவின் குக்கிராமங்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது. 

மேற்கத்திய நாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்திருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் “Living together” எனப்படும் கூடிவாழும் முறை.   இதைத்தான் “பெண்ணுரிமை” என்று “பிற்போக்கு பெண்ணியவாதிகள்” கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  இதனால் கடைசியில் பாதிக்கப்பட்டிருப்பது யார் என்று செய்தியை படித்துப் பாருங்கள்...

தினமலர் செய்தி  3 மே 2014

மதுரை: "முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தால், ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு, கணவன் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். இவ்வழக்கில் இருவர் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை சமர்ப்பித்தும், அதை மாஜிஸ்திரேட் கருத்தில் கொள்ளாதது, பாராட்டத்தக்கதல்ல. மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரி. வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டியன். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்தனர். பின், வேறு பெண்ணை பாண்டியன் திருமணம் செய்தார். ஈஸ்வரி,"எனக்கு வாழ்க்கை நடத்த சிரமமாக உள்ளது. பராமரிப்புத் தொகை வழங்க, பாண்டியனுக்கு உத்தரவிட வேண்டும்,' என உத்தமபாளையம் ஜே.எம்.,கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட், "பாண்டியனை திருமணம் செய்து கொண்டதை, மனுதாரர் நிரூபிக்கவில்லை,' எனக்கூறி, 2012 ல் தள்ளுபடி செய்தார். இதை ரத்து செய்யக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், ஈஸ்வரி மேல்முறையீடு செய்தார். நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சக்கரவர்த்தி ஆஜரானார்.

நீதிபதி உத்தரவு: மனுதாரர் மற்றும் பாண்டியன் 1999 ல், திருமண ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை, தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தப் பத்திரம், ஒரு புதிர் போல் உள்ளது. இருவரும் முதலில் கணவன், மனைவி போல் வாழ்ந்துவிட்டு, பின், திருமண ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ்வது என முடிவு செய்துள்ளனர்.

பிரிந்து போக நேரும்பட்சத்தில், யார் அவ்வாறு முடிவு செய்கின்றனரோ, அவர் 40 ஆயிரம் ரூபாய் வழங்குவது எனவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒப்பந்தத்திலுள்ள விஷயங்களை, பாண்டியன் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு வழக்கு அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் 2008 ல் பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "விதிகள் மற்றும் சம்பிரதாயப்படி, திருமணம் நடந்திருந்தால், பதிவு செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளது. இருவருக்கு இடையில் திருமணம் நடந்ததா? இல்லையா? என, வழக்குத் தொடர்ந்தவர் தான், நிரூபிக்க வேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த பண்டிதர், "திருமணம் நடக்கவில்லை' எனக்கூறினார் எனில், நடந்ததாக கருத முடியாது.

இவ்வழக்கு ஆவணங்களின்படி, மனுதாரரும், பாண்டியனும், கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தது உறுதியாகிறது. மனுதாரரை கைவிட்டு விட்டு, வேறு பெண்ணை பாண்டியன் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை ஏமாற்றி, இரண்டாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்தால், ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு, கணவன் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வழக்கில் இருவர் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை சமர்ப்பித்தும், அதை மாஜிஸ்திரேட் கருத்தில் கொள்ளாதது பாராட்டத்தக்கதல்ல. மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

வழக்கை, மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரித்து, மனுதாரருக்கு, பராமரிப்புத் தொகை எவ்வளவு வழங்குவது என நிர்ணயிக்க வேண்டும், என்றார்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.