இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 14, 2009

சூப்பர் நெத்தியடி!


தினமலர் நவம்பர் 15, 2009

புதுடில்லி : "ஆண்கள் வாக்குறுதியை நம்பி, நெருங்கி விடாதீர்கள்; கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு தான்' என்று காதல் செய்யும் பெண்களுக்கு ஐகோர்ட் அறிவுரை தந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து காதலியை கற்பழித்து விட்டார் ஒரு வாலிபர். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, கோர்ட்டில் முன்ஜாமீன் கோரினார். டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதி கைலாஷ் காம்பீர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், "இதில் குற்றம் சாட்டப்பட்டவர், சம்பந்தப்பட்ட பெண்ணுடன், திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடல் ரீதியாக உறவு கொண்டுள்ளார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என்றார். ஆனால், இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். "அரசு தரப்பு வக்கீல் சொல்வதை ஏற்க முடியாது; இந்த விஷயத்தில் பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறி, முன்ஜாமீன் அளித்தார்.

நீதிபதி மேலும் கூறியதாவது:

தங்களுடன் பழகும் ஆண்களுடன் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு தான். எந்த ஆணையாவது காதலித்து, அதனால், நெருக்கமாக இருக்கலாம் என்று முடிவு செய்வதும், பொறுப்பை தவற விடுவதுமாக இருந்தால் அதற்கு அவர்கள் தான் முழுப்பொறுப்பு. பெண்களுக்கு, தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது; அவர்களின் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதில் அவர்கள் தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தன்னுடன் பழகும் காதலன் தரும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி, தன்னை உடல் ரீதியாக இழந்து விடக்கூடாது. பெண்கள், இது போன்ற சமயத்தில், உடல் ரீதியான தொடர்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். "நான் உன்னை கைவிட மாட்டேன்; திருமணம் செய்து கொள்வேன்; அப்படியிருக்கும் போது, நாம் விலகி இருக்க வேண்டுமா?' என்று மாய்மாலமாக பேசி, காதலியை கவருவது சிலருக்கு கைவந்த கலை. அதை நம்பி பெண்கள் ஏமாந்து விடக்கூடாது. வாக்குறுதிகளை நம்பி, தங்கள் நிலையை மோசமாக்கி கொள்ளக்கூடாது. அவர்கள் தங்களின் தூய்மையை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும். ஆணிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப் பும், தைரியமும் பெண்களுக்கு வர வேண்டும். அதில் அவர்கள் அசட்டையாகவோ, தவறான நம்பிக்கையுடனோ இருந்து விடக்கூடாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

=============

மேலுள்ள செய்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ள செய்தியைப் படித்த பிறகு இந்த வீடியோவையும் பாருங்கள். அப்போது தான் இந்த நீதியரசர் செத்துக்கொண்டிருக்கும் நீதியை எப்படி காப்பாற்றியிருக்கிறார் என்பது நன்றாகப் புரியும். இவரைப்போல சில நீதி தவறாத சான்றோர்கள் நாட்டில் இருப்பதால் தான் நீதி இன்னும் சட்டப்புத்தகத்திற்கு வெளியேயும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.






No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.