இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 27, 2009

விவாகரத்துக்களுக்கு (ஆண்களுக்கு) விடிவுகாலம் வருமா?

விவாகரத்து வழக்கு தொடர்ந்தால் ஒரே ஆண்டில் தீர்ப்பு கிடைக்கும் : சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
செப்டம்பர் 28,2009

மும்பை : தேங்கிக் கிடக்கும் விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க, சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், ஒரே ஆண்டுக்குள் அந்த வழக்கை முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் பெருமளவிலான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக, குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. தலைநகர் டில்லியில் மட்டும் ஆண்டுக்கு 9,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. மும்பையில் 2007ல் 6,761 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2008ல் 7,526 ஆக விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. மும்பை பாந்த்ராவில் மட்டும் 10 ஆயிரம் விவாகரத்து வழக்குகள் தேங்கியுள்ளன. நாடு முழுவதும் இதே நிலை தான் உள்ளது. இது மட்டுமல்லாமல், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால், குழந்தைகள் யாரிடம் இருக்க வேண் டும் என்பது குறித்தும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: ஏற்கனவே பிரிந்து வாழ்வது என்று முடிவு செய்து விட்ட தம்பதியர்களுக்கு இடையே, விவாகரத்து வழக்கை தேவையில்லாமல் ஆண்டு கணக் கில் இழுத்தடிப்பதால், பயன் ஒன்றுமில்லை. மனமொத்த கருத்தில்லாத தம்பதியர்களின் வழக்கை, கூடுமான வரையில் ஒரு ஆண்டுக்குள் குடும்ப நல கோர்ட்டுகள் முடிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தம்பதிகள் மறுவாழ்வைத் துவங்குவதற்கு உபயோகமாக இருக்கும். குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்ற பிரச்னையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை முடித்தால்தான் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது.

விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், விவாகரத்து மற்றும் குழந்தைகள் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்க "கிராம நியாயாலயம்' என்ற அமைப்பின் மூலம் வழக்குகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

================================

மனைவி சந்தேகப்படுகிறார் என்பதற்காக விவாகரத்து வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
செப்டம்பர் 28,2009

மும்பை: "மனைவி சந்தேகப்படுகிறார் என்ற காரணத்துக்காக, விவாகரத்து வழங்க முடியாது' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ், ஸ்மிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவகாரத்து வழங்க கோரி, மும்பை ஐகோர்ட்டில் ராஜேஷ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,"வேறொரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக என் மனைவி சந்தேகப்படுகிறாள். இது தொடர்பாக என் நண்பர்களிடம் அடிக்கடி விசாரிக்கிறாள். இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவாகரத்து வழங்க வேண்டும்' என, குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனைவி சந்தேகப்படுகிறாள் என்ற காரணத்தை கூறி விவகாரத்து கோர முடியாது' என, கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். (ஆனால் இதுவே மனைவி மனஉளைச்சல் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் கணவர் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். நல்ல சட்டம்!)

பின்னர் அவர்கள் கூறியதாவது: திருமணத்துக்கு பின், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை எந்த மனைவியும் பொறுத்துக் கொள்ள மாட்டார். குறிப்பாக, இரவு நேரங்களில் கணவர் வீட்டில் இருக்க வேண்டும் என மனைவி விரும்புவது வழக்கம். இதுபோன்ற சூழ்நிலையில், தனது கணவர் இரவு நேரங்களில் தொடர்ந்து தாமதமாக வருவது, எந்த மனைவிக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தத் தான் செய்யும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.