இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, May 19, 2010

பெண்கள் பலவிதம்!!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!!

இந்தியப் பெண்கள் எப்படி பலவிதங்களில் இருக்கிறார்களோ அதுபோல இந்திய சட்டங்களும் பல விதங்களில் தன் இஷ்டப்படி இருக்கிறது. பிறகு பெண்களுக்கு கொடுமை செய்கிறார்கள் என்று ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள் .

தினமலரில் (20 மே 2010) வந்துள்ள இரண்டு செய்திகளைப் பாருங்கள்:




நாகர்கோவில் : குடித்து விட்டு மணமேடை ஏறிய மணமகனை உதறி தள்ளிவிட்டு மணமகள் வெளியேறி போலீசில் புகார் செய்தார்.

(தினமணி கார்ட்டூன்)

நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (29). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த சுஜி (24) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐந்து பவுன் நகையும் ஒரு லட்சம் ரூபாயும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. நேற்று தடிக்காரன்கோணம் பனிமாதா ஆலயத்தில் காலை பத்து மணிக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் மணமகன் வீட்டார் தாமதமாக 12.30 மணிக்குதான் ஆலயத்துக்கு வந்தனர். மணமேடைக்கு வந்த மணமகனிடம் மது வாடை வீசியதை சுஜி உணர்ந்தார். இதை உறுதி செய்ய ஜெயபாலனிடம் பேச்சு கொடுத்தார். அவர் குடித்திருப்பது உறுதியானதும், சுஜி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மணமேடையை விட்டு வெளியேறினார். பின்னர் தடிக்காரன்கோணம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் சமரசம் செய்து ஐந்து பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை திரும்ப பெற்று கொடுத்து அனுப்பி வைத்தனர்.


இந்த செய்தியில் மணமகன் குடித்தது பெரிய குற்றமாக மணமகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் வாழ்வை கெடுக்கும் வகையில் வரதட்சணைக் கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக அவர் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பது குற்றமாகத் தெரியவில்லை. ஆனால் மணமகனோ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிசெய்யும் வகையில் அரசு நடத்தும் சாராயத் தொழிலுக்கு விற்பனையை அதிகப்படுத்தி நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக நடந்திருக்கிறார். ஆனால் மணமகளோ வரதட்சணைக் கொடுத்து சட்டத்திற்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்தியப் பெண் சமுதாயத்திற்கு எதிராகவும் குற்றம் புரிந்திருக்கிறார்.

இவர்களில் யார் குற்றவாளி? காவல்துறையும் இதை கண்டுகொள்ளாமல் இந்த வரதட்சணைக் குற்றத்தை ஊக்குவித்திருக்கிறது.

மணமகன் குடித்தால் தன் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று நினைத்த பெண் தான் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்தால் இந்த கொடிய வழக்கம் மேலும் தொடர்ந்து பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமே என்று எண்ணவில்லையே. என்ன ஒரு சுயநலம் பிடித்த இந்தியப் பெண்கள்! இவர்களைக் காக்க எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்தியப் பெண்களுக்கு எதிரி இந்தியப் பெண்கள் தான். இதில் பலியாவது அப்பாவி ஆண்கள்.

==================================




போடி: திருமணம் நடக்க இருந்தநிலையில், காதலனுடன் மணப்பெண் ஓடியதால் திருமணம் தடைபட்டது. இருவரும் மைனர் என்பதால் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போடி அருகே குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (18). போடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் கரிகாலன் மகள் ஜெயலட்சுமி (17). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர்கள், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலட்சுமிக்கு பெற்றோர், வெறொருவருடன் திருமணம் நிச்சயித்தனர். திருமணம் நேற்று காலை பெரியகுளத்தில் நடப்பதாக இருந்தது. ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்துவந்தனர். நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அன்று மாலையில், போடியிலுள்ள வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஜெயலட்சுமி வெளியேறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இரு வீட்டாரும் பெண்ணை தேடத்துவங்கினர். இதில், ஜெயலட்சுமி தன்னுடன் வேலைபார்த்த ராஜேசுடன் ஓடியது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வரை கண்டுபிடிக்க முடியாததால், திருமணத்தை ரத்து செய்தனர்.

போடி டவுன் போலீசாரிடம், கரிகாலன் தனது மகளை அவருடன் வேலை செய்த ராஜேஷ் கடத்தி சென்றாக புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இருவரும் மூணாறில் உள்ள லாட்ஜ் ல் தங்கியிருந்தது தெரிந்தது. இருவரையும் பிடித்து விசாரித்தனர். 'தனக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் காதலுடன் சென்றேன்' என ஜெயலட்சுமி போலீசாரிடம் தெரிவித்தார். இருவரும் மைனர் என்பதால் ஜெயலட்சுமி, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

======================

இந்த செய்தியில் ஓடிப்போன மணப் பெண் மைனர் என்று போலிசார் கைது செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை! மைனர் பெண்ணுக்கு கட்டாயத் திருமணம் செய்ய முயற்சி செய்திருக்கும் பெற்றோருக்கு எந்த தண்டணையும் இல்லை.

நாட்டில் சட்டங்களை இப்படி ஏனோ தானோ என்று கடைபிடித்தால் பெண்களுக்கு எப்படி கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். மேற்கண்ட இரண்டு செய்திகளிலும் காவல்துறையும் அரசாங்கமும்தான் கொடிய குற்றவாளிகள். இப்படித்தான் நாட்டில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டிய இடத்தில் பயன்படுத்தப்படாமல் பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை துன்புறுத்துவதற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.