இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, November 14, 2011

குடும்ப உடைப்புத் திட்டம் நிறைவேறுமா?

குடும்பத்தில் சாதாரணமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருமகள்கள் பொய் வரதட்சணை புகார் கொடுக்கும்போது அதனை எந்தவித விசாரணையும் இன்றி கண்ணை மூடிக்கொண்டு பதிவு செய்து கணவன் குடும்பத்தினரை கண்மூடித்தனமாக கைது செய்துவந்த போலிஸ் இப்போது அவர்கள் எழுதிவந்த “பொய் வழக்குகளால்” பல குடும்பங்கள் சிதைவதாக வருத்தப்பட்டு “கவுன்சிலிங்” என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

வரதட்சணைப் புகார் வரும்போது அதனை உடனடியாக வழக்காக பதிவு செய்யாமல் வரதட்சணை தடுப்பு அலுவலரைக் (மாவட்ட சமூக நல அலுவலர்) கொண்டு முதற் கட்ட விசாரணை செய்து பிறகுதான் போலிஸ் அந்தப் புகாரை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வரதட்சணை தடுப்புச் சட்டம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் இதுவரை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இருக்கின்ற சட்டங்களை யாருமே மதிப்பதில்லை. பிறகு ஏதோ வித்தை காட்டுவது போல எதையாவது காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யார் வீட்டில் இந்த “தீ” பற்றி எரிந்தது என்று தெரியவில்லை. இப்போதாவது விழிப்புணர்ச்சி வந்திருக்கிறதே!



கோவை நகரில், குடும்பப் பிரச்னைகளில் சிக்கி நிம்மதியிழந்த தம்பதியர்களுக்கு உதவுவதற்காக,"மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை துவக்கியுள்ளனர் போலீசார். இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வுக் குழுவினர், பகுதி வாரியாக பொதுமக்களை சந்திக்கவுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை, குடிபோதை கணவனின் துன்புறுத்தல், கணவனின் கள்ளத் தொடர்பு உள்ளிட்ட பிரச்னைகளால் போலீசில் புகார் அளிக்கும் பெண்களின் எண்ணிக்கை கோவை நகரில் அதிகரித்து வருகிறது. அதே போன்று, மனைவி நடத்தையில் சந்தேகம், கள்ளத்தொடர்பு காரணமாக கணவன்மார் தரப்பிலும் அவ்வப்போது புகார் அளிக்கப்படுகிறது. குடும்பப் பிரச்னைகள் தொடர்பான புகார் வந்தால் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து, முடிந்தவரை "கவுன்சிலிங்' அளித்து கணவன் - மனைவியை சேர்த்து வைக்க முயற்சிக்கின்றனர். முடியாத நிலையில், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக கோவை மாநகரில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, "பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண் - 1091' செயல்படுகிறது; குடும்ப பிரச்னைகளுக்காக பெண்கள் போன் செய்து உதவி பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் தொடர்ச்சியாக மாநகர போலீசில், "மொபைல் கவுன்சிலிங்' (நடமாடும் கலந்தாய்வுக்குழு) துவக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அளிக்கும் குழுவில் ஆலோசகர்கள் கோதனவள்ளி, மகாலட்சுமி, சுகுமாரி இடம்பெற்றுள்ளனர். இவர்கள், அவ்வப்போது நகரிலுள்ள 15 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர். இவர்களுடன் வக்கீல், அரசு டாக்டர், போலீஸ் அதிகாரிகள் செல்லவுள்ளனர். குடும்பப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆண், பெண்களை அழைத்து "கவுன்சிலிங்' அளிப்பதே இக்குழுவின் நோக்கம்.

இத்திட்டத்தின் துவக்க நாள் கவுன்சிலிங் சமீபத்தில் ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. குடும்ப நல ஆலோசகர் கோதனவள்ளி தலைமையிலான குழு உறுப்பினர்கள், மாநகர போலீஸ் மேற்குப் பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக் கமிஷனர் ராஜா, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதிஅனுசுயா பங்கேற்று, 11 குடும்ப உறுப்பினர்களுக்கு "கவுன்சிலிங்' அளித்தனர். இதில், இரண்டு குடும்பத்தினரின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்; மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து "கவுன்சிலிங்' அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மற்ற போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குள்ளும் "மொபைல் கவுன்சிலிங்' நடக்கவுள்ளது.

"மொபைல் கவுன்சிலிங்' திட்ட ஒருங்கிணைப்பாளர் கோதனவள்ளி கூறியதாவது:குடும்ப அமைப்பில் பெண்கள் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்துக்குப் பின் கணவராலும், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களாலும் பிரச்னைகள் எழும்போது, "வரதட்சணைக் கொடுமை' புகார் அளித்துவிடுகின்றனர்; ஒரு சில பெண்கள், தனிக்குடித்தன நோக்கம் நிறைவேறாத போது மாமனார் மற்றும் மாமியார் மீது பொய்யான புகார்களை தெரிவிப்பதும் உண்டு. இதுதொடர்பான புகார்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நேரிடும். அவ்வாறு செய்தால் குடும்பம் பிளவுபடும்; பிள்ளைகள் இருந்தால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பதிலாக இரு தரப்பினரையும் அழைத்து "கவுன்சிலிங்' அளித்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்; குடும்பத்திலும் அமைதி நிலவும். இதற்கான முயற்சியாகவே, "மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி துவக்கியுள்ளார். இவ்வாறு, கோதனவள்ளி தெரிவித்தார்.

19 வயதில் பாழானது வாழ்க்கை!ஆர்.எஸ்.புரத்தில் நடந்த முதல் "மொபைல் கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 19 வயது இளம்பெண், தனது பிரச்னையை ஆலோசகர்களிடம் தெரிவித்து கதறி அழுதார். "என்னை காதலித்து திருமணம் முடித்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் பிழைப்புக்கு வழியின்றி நகைத்தொழிலில் ஈடுபட்டேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய நபர், என்னுடன் "தொடர்பு' வைத்து கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, தெரிவித்தார். இவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறிய ஆலோசனைக் குழுவினர், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.