இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.