இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, April 14, 2013

கழிவறையில் வாழ்க்கை - தவறான பாதையில் சரியாக செல்லும் மக்கள்

சமீபத்தில்  நடந்த டில்லி சம்பவத்தை மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக  பெரிதாக்கி உலக அளவில் பிரபலப்படுத்தி அவசர அவசரமாக பல ஒருதலைபட்சமான சட்டங்களை இயற்றிய அரசாங்கம் இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேராக இருப்பது “ஊழல்” என்று தெரிந்தாலும் அதனை ஒழிக்க உடனடி சட்டம் இயற்ற பல ஆண்டுகளாக தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறது. 

இந்த விஷயம் பலருக்கும் தெரிந்தாலும் வழக்கம்போல நாம் இந்தியர்கள் என்று பெருமையாக ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் குடிகளுக்கு நடுவே மனித நேயம் வளருமா அல்லது தேய்ந்துபோகுமா? என்று எண்ணிப் பார்த்தால் பின்வரும் செய்தியில் பதில் இருக்கிறது.

தேசிய அளவில் புற்றுநோய் போல பரவியுள்ள ஊழலை ஒழிக்க எந்த இந்தியக் குடியும் விளக்கேந்தி சட்டம் இயற்றும்வரை ஓயமாட்டோம் என்று போராடவில்லை! இதுபோன்ற போராட்டங்கள் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்திபோலத்தான் இன்றும் இருக்கிறது.

ஒரு கற்பழிப்பிற்காக அடுக்கடுக்காக பல சட்டங்களை அவசரமாக எழுதிய அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒழிக்கத்தவறிய ஊழலால் ஒரு அப்பாவிக் குழந்தை பொதுக் கழிவறையில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? 

இந்திய மண்ணில் பிறந்தால் லஞ்ச ஊழலால் அப்பாவிகளின் வாழ்க்கை கழிவறையில்தான் தள்ளப்படும்  என்று இந்தக் குழந்தை எதிர்காலத்தில் எண்ணிவிடுவதற்குள்ளாவது லஞ்ச, ஊழல் வழக்கில் சிக்குபவருக்கு மரண தண்டனை என்று சட்டம் எழுத  நேர்மையானவர்கள் இருக்கிறார்களா?
இந்த கர்பிணிப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை இனி எந்த ஒரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று லஞ்சத்தை ஒழிக்க உடனடியாக ஒரு கடுமையான சட்டம் எழுதுவார்களா?  அல்லது “இளம் பெண்கள்” மட்டும்தான் பெண்களாக தலைவர்களின் கண்களுக்குத் தெரியுமா?

சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது:விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

1 comment:

கவியாழி said...

வெட்கப்ப் பட வேண்டிய விஷயம்.பெண்களே பெண்களை இப்படி நடத்த எப்படி மனம் வருதோ.அதுவும் ஒரு பிறப்பை போற்றாமல் பணத்தை மட்டுமே பார்கிறார்கள் ,கேவலம் மனித நேயமற்ற மடையர்கள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.